Saturday, February 25, 2006

நீதானே நீதானே.......!


அமைதிக்கு மறு பெயர் நீதானே!
அகிலத்தின் ஆரம்பமும்
நீதானே!

பூமிப்பெண்ணுக்கு ஆடை சூடி
அழகு பார்த்தவளும்
நீதானே!

இன்று பலிகள்
பலவெடுத்த பாதகியும்
நீதானே!

Friday, February 10, 2006

வா மன்னவா.......!



கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தம் ஒன்று செய்வோம் வா!
இரவு பகல் பாராது
நித்தம் பல செய்வோம் வா!

இருவரும் வெற்றி கொள்ளும்
மோதல் விளையாட்டடா!
அது இங்கு மாத்திரம் தானடா!

என் கூந்தலின் மணம் அறிந்தவனே
மங்கை இவள் மனம் வென்றவனே
மெளனத்தின் மொழி தெரிந்தவனே
என்னையும் பாதியாகக் கொண்டவனே

உன் அனல் மூச்சுக் காற்று பட்டு
எரிந்திடுதே என் தேகமடா
அனலும் நெருப்பும் சேர்வோம் வாடா
என்னை எரித்து அணைக்க நீ வாடா

வா மன்னவா என்னை
அணைக்க வா மன்னவா?

என் கூந்தலில் உன் விரல்களால்
இசை மீட்டிட நீ வாடா
வந்து சுதி ஏற்றடா
ஏற்றி எனை மீட்டு போடா.

மார்பு அகன்ற வீரனடா
ஆண் மகன் நீ தானடா
அல்லி இவளை அள்ளிக் கொள்ளடா
கொன்று கொண்டு செல்லடா!

www.nilafm.com

Sunday, February 05, 2006

நீ உணர்வாய்....!


நாடகம் முடிந்ததும் வேசத்தினை
கலைத்து விட...
வாழ்க்கை நாடக மேலையல்ல

உனக்கு கொடுக்க பட்ட பாத்திரம்
உன் உயிர் வரை ஒட்டியிருக்கும்
அது தானே நிஜம்!

நினைப்பதும் பின்னர் வெறுப்பது
உன் விருப்பம்
அதனால் பாதிக்கப் படுவது நீயில்லை தானே!

நீ பெண் என்பதால்
துயர்காட்டிடுவாய் கண்ணீரில்
ஆனால் ......
ஆண் என்ன செய்வான்?

என் மனம் அழுவது கூடவா
உன் செவிகளுக்கு கேட்கவில்லை!

என்றோ ஓர் நாள்
எனை நீ உணர்வாய்
அன்று உன் கைகளுக்கு
எட்டாத தூரத்தில் நட்சத்திரமான வானில் நான்!

Wednesday, February 01, 2006

இன்று முதல் காதலிக்கின்றேன்.



என் தாயிலும் மேலாய்
ஏன் என்னிலும் அதிகம்
என்னை பற்றி
அறிந்ததும் நீ தானே!

எத்தனை முறை உன்னை
கேலி செய்திருப்பேன்
முகம் ஏது மூக்கு ஏது
என்றே தெரியவில்லை
பரட்டை தலை
இன்னும்..எத்தனை, எத்தனையோ...

என்னைக் கேளாமலே
நித்தம் எனைத் தொடர்ந்தாய்
சல்லி காசுக்கு கூட
உன்னை நான் பார்த்தேனா?

பொறுமைக்கு பூமித்தாயை
உதாரணம் சொல்வர்
ஆனால் அது உண்மையில்லை
அது கூட தனது கோபத்தை
அதிர்ச்சியாக வெளிப்படுத்தும்

எப்படித்தான் உனக்கு
இத்தனை பொறுமை......?
அதிசயம் தான் ஆனாலும்
உண்மை அல்லவா!

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்
உனது காதலுக்கு
மொழி கூடக் கிடையாதே!
என்னை இன்று கிறுக்க வைத்ததும்
நீதானே!

ஆம் இன்று நீ எனது
கண்ணிற்கு தேவதை
உனது விரதம் வெற்றியே

உண்மை தான்
நான் எனது
நிழலை காதலிக்கின்றேன்!